×

தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு ₹5 கோடியில் சொகுசு பங்களா கட்டி ஜாலியாக வாழ்ந்த ஜோடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; 50 பவுன் பறிமுதல்

கோவை: கோவையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு ரூ. 5 கோடியில் சொகுசு பங்களா கட்டி ஜாலியாக வாழ்ந்த தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.

அப்போது டவுன்ஹாலில், 3 பெண்கள் ஓடிச் சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை தனிப்படை போலீசார் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் தனிப்படை போலீசாரால் உடனே பிடிக்க முடியவில்லை. பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அந்த ஆட்டோ எண்ணை கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களை சேகரித்து டிவைரிடம் விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் அந்த 3 பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பெண்களும், அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும், அங்கு ஒரு வாலிபரிடம் போனை வாங்கி பேசி, பஸ் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்களிடம் செல்போனை கொடுத்த நபரை கேமராவில் கண்காணித்தனர். அதில் அவர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம் 15 நிமிடம் பேசி சென்றது பதிவாகி இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் உள்ள 4 வார்டிலும் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் உறவினர் என்பதும், அவர் திருப்பூரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவரது முகவரியை பெற்றுக்கொண்ட போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போன் மூலம் 3 பெண்கள் பேசிய எண்ணை கைப்பற்றினர். அந்த செல்போன் எண் உள்ள இடத்தை டிராக் செய்து பார்த்தபோது அது மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு ஓட்டலை காட்டியது. போலீசார் அங்கு சென்றபோது அந்த செல்போனை வைத்திருந்த நபர் ஓட்டலை காலி செய்து சென்று விட்டதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பின்னர் அந்த செல்போன் எண் யாருடையது என்ற விவரத்தை சேகரித்து, தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை டிராக் செய்தனர். அப்போது அந்த செல்போன் எண் பெங்களூரை காட்டியது. போலீசார் பெங்களூர் செல்ல திட்டமிட்டபோது மீண்டும் அந்த செல்போன் எண் சென்னையை காட்டியது. சென்னையில் தொடர்ந்து செல்போன் எண் இருந்ததால் தனிப்படை போலீசார் ஜேப்படி கும்பலை பிடிக்க சென்னைக்கு போலீஸ் வேனில் விரைந்தனர். போலீஸ் வேன் சேலம் அருகே சென்றபோது விபத்துக்கு உள்ளானது. அதில் சென்ற போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சேலத்தில் சிகிச்சை பெற்று கோவை திரும்பினர்.

இருப்பினும் போலீசார் அந்த செல்போன் எண்ணை தொடர்ந்து டிராக் செய்து வந்தபோது மீண்டும் அந்த கும்பல் கோவை மருதமலைக்கு வந்திருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோவிலில் இருந்த 3 பெண்களையும், அவர்களுக்கு ஐடியா தந்து வந்த ஒருவரையும் பிடித்து வெரைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள் பரமக்குடியை சேர்ந்த ரவி(47), அவரது மனைவி பழனியம்மாள்(40), உறவினர்கள் வனிதா(37), நதியா(37), ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அதில், ரவி அவர்களை வழி நடத்தி வந்ததும், 3 பெண்கள் அவரது வழிகாட்டுதலின்படி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ், கோவில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஷ்மீர், டெல்லி, மும்பையில் ஜேப்படி தம்பதி சுற்றுலா
ஜேப்படி கும்பல், மாதத்தில் 30 நாட்களில், 20 நாட்கள் திருட்டிலும், 10 நாட்கள் சுற்றுலாவும் சென்று வந்து உள்ளனர். சுற்றுலாவின் போது நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர். இதில், கணவன், மனைவியான ரவி, பழனியம்மாள், காஷ்மீர், டெல்லி மும்பை என இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்து உள்ளனர். நகை திருடும் முன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்கள் நகை திருடிய பணத்தில் பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் வீடு, விலை உயர்ந்த கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் டாக்டர் மற்றும் இன்ஜினியரிங் படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

விபத்தில் சிக்கிய போலீசார்
ஜேப்படி கும்பலால் வேறு யாரும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக தனிப்படை போலீசார் அவர்களை விரைந்து கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். அந்த கும்பல் சென்னையில் இருப்பதை அறிந்ததும், போலீசார் இரவோடு இரவாக போலீஸ் வேனை ஏற்பாடு செய்து சென்னை புறப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக லாரி மோதி வேன் விபத்துக்கு உள்ளானது. அதில் இன்ஸ்பெக்டர் கண்ணையன், எஸ்.ஐ மாரிமுத்துவுக்கு லேசான எலும்புமுறிவு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள், ஜேப்படி கும்பல் மருதமலையில் இருப்பதை அறிந்து கட்டுடன் வந்து கைது செய்தனர்.

The post தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு ₹5 கோடியில் சொகுசு பங்களா கட்டி ஜாலியாக வாழ்ந்த ஜோடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; 50 பவுன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Govai ,Khova ,
× RELATED முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு...